Thursday, June 4, 2009

கூத்துப்பட்டறையில் - 12 கலிங்கத்துப்பரணி விம்மியதே ?

கலிங்கத்துப்பரணி விம்மியதே? தேம்பாவணி அழுததே???!!!

அற்புதமான இசைக்கச்சேரிக்குப் பிறகு, தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு கரகாட்டம்.
கூத்துப்பட்டறையில் படித்ததற்கும், இவர்களின் நிகழ்வுக்கும் நிரம்ப வேறுபாடிருந்தது.ஆனாலும் ரசித்துப்பார்க்கமுடிந்தது.
அடுத்துக்காப்பிக்கு எல்லோரும் எழ, தோழிகளோடு சென்று, சாயைக்கு கப்பில் வார்த்துக்கொண்டிருக்க, ”கமலாக்‌ஷி,” என்ற விளி. திடுக்கிட்டுத் திரும்பினால், Dr.ராஜமாணிக்கம், யாரோ 3 பேரோடு நின்று கொண்டிருந்தார்.
இவள் பெயர் படும் பாடு நினைத்தபோது ஏனோ சிரிப்பு வந்துவிட்டது.மலையாள அவையில் கமலம்.தமிழ்த்தோழிகட்கு கமலா, ஆசிரியர், மற்றும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே, இவளை முழுப்பெயரில் அழைப்பார்கள்.மலையாளிகட்கு மறந்தும் இவள் முழுப்பெயர் வராது. எல்லோருக்குமே கமலம்தான். அதனாலேயே இவளே கூட,கமலமாகிப்போனாள்.ஆனால் கமாலாக்‌ஷி, --
இதுவரை கேட்டே இராத பெயர். ஆனாலும் இவள் திருத்த முன்படவில்லை.எவ்வளவு அன்பாக அழைக்கிறார். எதிரில் நின்ற எல்லோருமே இவளைவிட எவ்வளவோ பெரியவர்கள் தான். ’நமஸ்காரம் சார்,” என்றிட, ”கமலாக்‌ஷி, இவர் முனைவர் திருவேங்கடம், இவர் புலவர் சபேசன், இவர் முனைவர் கணேசமூர்த்தி.இவர்கள் மூவரும் உங்கள் அமர்வில்தான் பேசுகிறாரகள்.”

கமலாக்‌ஷி எழுத்தாளர் கூட தெரியுமா? என்று ராஜமாணிக்கம் , பரஸ்பரம் அறிமுகப் படுத்த, பொல்லென்று வெளுத்த தலைமுடியோடு முனைவர் திருவேங்கடம் ஏனோ அச்சாவை நினைவு கூர்ந்தார். சபேசன் கேட்டார். ”என்ன செய்கிறீர்கள்? ”
”நிங்ஙளைப் போன்றோரிடம் தமிழ் பயின்று கொண்டிருக்கிறேன் சார்.”
”நம்பாதீர்கள், கமலாக்‌ஷி பேசும்போது உங்களுக்கே தெரியும் ”!, என்று ராஜமாணிக்கம் சார் மேலும் இவளை சிலாகிக்க, இவளுக்கு வெட்கமாகிவிட்டது.அதற்குள், அடுத்த நிகழ்வுக்கு நேரமாகிவிட்டது.அரசியல் வாதிகளின் உரைக்குப்பிறகு தான், இவர்கள் நிகழ்வு.
அதனால் முன்னேற்பாடாக, முனைவர் திருவேங்கடம், இவள், கணேசமூர்த்தி,சபேசன் என , முன்னிருக்கையிலேயே அமர்த்தப்பட்டார்கள்.

வழக்கமான அமர்க்களத்தோடே அரசியல்வாதிகளின் சரித்திரப்புகழ் பெற்ற சொற்பொழிவு . [செந்தமிழ்தேன்மொழி அழத்தொடங்கினாள்.] அரசியலில் அப்பொழுதுதான் பதவியிழந்த மூவர், ஒரு அமைச்சர் பெண்மணி, இன்னொரு எம்.பி. பெண்மணி, என பந்தா படுதா தொடங்கியது. அமைச்சர் பெண்மணி சிரித்துக்கொண்டேயிருந்தார்.எம்.பி. பெண்ணும்,இன்னொருவரும் உம்மென்றிருந்தார்கள். முக்கியப் பிரபலம் நிறுத்தி நிதானமாகப் பேசினார்.அடுக்கடுக்காய் மூன்று குற்றச்சாட்டை அடுக்கினார். அரசு இவ்வளவு வசதிகள் செய்தும் இளைஞர்கள் ஏன் வசதிகளைப் பயன்படுத்துவதில்லை? பிறகு அவர் சின்ன வயதில் கஞ்சிக்கு பட்ட பாட்டை , பிறகு எப்படி படிப்படியாய் முன்னேறினார் என்பதையெல்லாம்
விளக்கினார். தனக்கிருந்த இந்த முனைப்பு ஏனினின்றைய இளைஞர்களிடம் இல்லை” என்றெல்லாம் கேட்டு ஒருவழியாக அமர்ந்தார். அடுத்து அமைச்சர் பெண்மணி எழுந்தார்.”பெண்களெல்லாம் எவ்வளவுகாலத்துக்கு இப்படிகட்டுப்பெட்டிகளாகவே வாழ்வது, கூட்டை விட்டு வெளியே வாருங்கள்?

பிள்ளை பெறுவதும், ஆம்பிளைக்கு சோறு பொங்கிப்போடுவதும் மட்டும்தான் நம்ம வேலயா? நடிகனின் காதலி நாட்டை ஆள வந்துவிட்டாள், நாம் சாதனை செய்யவேண்டாமா? ”என்று கேட்க, அக்குளில் கிச்சு கிச்சு மூட்டினாற்போல் சிலர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். உடனே அம்மையாருக்கு வேகம் கூடிற்று.பிறகு தேம்பாவணியை சம்பந்தமேயில்லாமல் கொண்டுவந்தார். ஆனால் சத்யமாயிட்டும் அது தேம்பாவணியல்ல.
அதைவிடக் கொடுமை அவர் உதாகரணம் காட்டிய பெண்களின் பெயர்கள். தப்பு.,தப்பு மஹா மஹா தப்பு. சாதனை செய்த இந்தியப்பெண்மணிகளுக்கா பஞ்சம்? மணக்க மணக்க, அவர்களின் பெயர்களை கண்ணிலொற்றி சொல்லலாமெ? தேவதாசிமுறைக்கு சாவுமணியடித்த மூவலூர் ராமாமிர்தம்,போராடிக்கல்வி கற்ற ருக்மா, ரமாபாய்,முத்துப்பழனி, தில்லையாடி வள்ளியம்மை, குடியாலோ, பிக்காஜி,எனப் பட்டியலிட்டால் எழுத, எழுதத் தீருமா?? அவரை உட்கார வைக்க காதோரம் ஏதோ கிசுகிசுக்க வேண்டியிருந்தது.

போனால் போகிறதென்று மனமில்லாமல் போய் அமர்ந்தார். அடுத்து எம்.பி. பெண்மணி உம்மென்ற முகத்தோடே மைக்கைப் பிடித்தார்.இன்று இலக்கியம் என்ன செய்கிறது? என்று தொடங்கினார். சங்க காலக் கவிதைகள் மட்டுமே கவிதைகள்,என்றவர் ஒளவையாரைத்தவிர
யாரையுமே உவமானம் காட்டவில்லை.பாண்டியனின் மனைவி ஒரு கவிதை சொன்னாள், என்று மேலும் தொடர்ந்தார். நம்பவே முடியவில்லை. ஆதிமந்தியார், வெள்ளிவீதியார், காக்கைப்பாடிணியார்,நச்செள்ளையார், கச்சிப்பேட்டு நன்னாகையார்,, குறமகள் இளவெயினி,ஒக்கூர் மாசாத்தியார், அள்ளூர் நன்முல்லையார்,காவற்பெண்டு, நக்கண்ணையார்,நப்பசையார், நல்வெளியார்,என சங்ககாலத்தில், கல்வியில் சிறந்து விளங்கிய , பெருமைக்குரிய பெண்புலவர்களைப் பட்டியலிட்டால் தீருமா? ஆனால் எம் .பி. பெண்மணியின் உரையில் அவர்கள் யாருமே வரவில்லை.
வேடிக்கை என்னவென்றால் அவர் பேசியது கூட கவி உரையாம்?
மூன்றாமவர் புயலாய் மைக்கைப்பிடித்தார். சூறாவளியாய் பேச்சைதொடங்கினார்.சீற்றத்தோடு அவர் மைக்கைப்பிடிக்க, தோள்துண்டு கூட பதறிக்கீழே விழுந்தது. எடுத்துக்கொடுக்க வந்த ஒரு ஜால்ராவைப்பார்த்து, பார்வையாலேயே,வேண்டாம் என்று ஒரு சீறல்.
தொடக்கமே, செந்தமிழே, என் தமிழே, ‘என்று தொடங்கியது கேட்க இன்பமாகத்தானிருந்தது. அடுத்துப் பாண்டியனின் வரலாறிலிருந்து தொடங்கினார்.
கொஞ்சமும் பொருத்தமில்லாமல், திடீரென்று,கலிங்கத்துப்பரணியை உவமானம் காட்டினார். சத்யமாயிட்டும் அது கலிங்கத்துப் பரணிப்பா அல்ல. புகழேந்திப் புலவரின் வெண்பாப் பாடல் அது. குறுகத்தரித்த குறள் ,எனக் குறளையும் வள்ளுவரையும் துணைக்கழைத்தார். சட்டென்று அவருக்கு உக்கிரம் ஏற்பட்டது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதால்தானே, மலையாளத்தானும், கன்னட------, தெலுங்கு----என எல்லா மானிலக்காரனுமே இங்கே வந்து கொட்டமடிக்கிறார்கள்? நம் தாய்ப்பாலைக்குடித்தே நமக்கே குழி வெட்டுகிறார்களே? எங்கே? தெலுங்கானாவில் போய் நாம் இடம் கேட்டால் அவன்கள் கொடுப்பார்களா? அண்டை மானிலம்தானே என்று உட்கார இடம் கேட்டால் கன்னட--- நம்மை உட்கார வைப்பானா?ஆனால் கூத்தாடியாக வந்த
மலையாளத்தான் ,மஞ்சள் துணி போட்டு நம் கழுத்தையே அறுத்தானே? அவனை நம்மால் என்ன செய்ய முடிந்தது? ---and etc----

அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்துப்போனாள். அவ்வளவு நேரமுமிருந்த உற்சாகம், மகிழ்ச்சி போன இடம் தெரியவில்லை. படித்தது, வளர்ந்தது, வாழ்வது எல்லாமே, நாகரீகமான ,multi racial country யில்தான். இந்த நிஷ்டூரம், இந்த வேற்றுமை, அவள் அறியாத விஷயங்கள். அமிலக்கட்டி உடைந்து விஷத் திராவகம், துள்ளத்துடிக்க அவள் மேல் கொட்டப்பட்டதாய் , துடித்துப்போனாள். , மலையாளத்தான், தமிழிலிருந்து பிச்சை கேட்ட மலையாளத்தான், என்ற ஒவ்வொரு விஷ அம்புக்கும் , நெஞ்சுடைந்து அழுகை வந்தது. எந்த ஜென்மத்துக்கு கர்மவினை இது? எந்தக்குற்றமுமே செய்யாமல்,ஏன்? ஏனிந்த தண்டனை? விரல் நீட்டி குற்றம் சாட்டப்பெற்ற,கொலைக்குற்றவாளியாய் ,
அவளால் தாங்கவேமுடியவில்லை. கண்ணீரை அடக்க பகீரதப் பிரயத்னம் வேண்டியிருந்தது. தக்‌ஷண்மே அங்கிருந்து வெளியேறி கணவருக்கு போன் செய்து அழவேண்டும்போலிருந்தது.[என்ன? இந்த ஜென்மத்தில் இனி தமிழ் நிகழ்வுக்கே கணவர் அனுப்பமாட்டார்.]
ஆனால் அவளால் அசையக்கூட முடியவில்லை. ஒரு க்‌ஷணம் தான் இருக்குமிடம், சூழ்னிலை, எல்லாமே மறந்துபோய் ஒரு தாவரம் போல் அமர்ந்து விட்டாள்.
வெட்கக்கேடு என்ன தெரியுமா? தமிழ், தமிழ், என்று இப்படி அடுக்குமொழி வசனம் பேசும் இந்த ஆளுக்கு, தமிழ் வரலாறே தெரியவில்லை. தமிழின் மாண்புமிகு சான்றோர்களின் பெயர்கள் கூடத்தெரியவில்லை. வெறும் அரை வேக்காட்டுப் பிதற்றல்தான்.
அடுத்து இன்னொரு கண்டனம், முதலில் இந்த-------பாப்பத்திகளை --- ஆணவத்தை அடக்கவேண்டும்? இவளுக்குப்புரியவில்லை. பாப்பாத்தி என்றால் என்ன பொருள்? தமிழில் யார் யார் பேரிலெல்லாம் இவருக்குக் கோபம்? நெஞ்சு விம்மியது, கட்டுப்பாட்டையும் மீறி அவள் விசும்ப, ”ஸ்ஸ்ஸ், அழக்கூடாது.அவன் ஆளுங்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட கோபத்தில் உளறிக்கொண்டிருக்கிறான்.அதற்குப்போய் அழலாமா?”
அச்சாமாதிரி தோற்றம் தந்த முனைவர் திருவேங்கடம், இவளத்தேற்ற,வாயில் கைக்குட்டையை அழுத்திக்கொண்டு, அவள் உடைந்து போய் அழுதாள்.
”கமலாக்‌ஷி, ரொம்ப புத்திசாலிப்பெண் என்று ராஜமாணிக்கம் சொன்னாரே, என்ன.இது? அவன் யாரைத் திட்டவில்லை? பிராமணர்களை இப்படி திட்டுகிறானே?
இப்பொழுது பிராமணர்கள் பிராமணியம் பேசுவதில்லை.இவர்கள்தான் பேசுகிறார்கள், இப்படியொரு வக்கிர இன்பம்?முதலில் கண்ணீரைத்துடையுங்கள், “
என்று முனைவர் கணேசன் ஆறுதல் கூற அப்பொழுதுதான் அவள் கேட்டாள் .
சார், பாப்பாத்தி என்றால் யார்? புலவர் சபேசன் விளக்கினார். ஆத்திரம்,அழுகை , இயலாமை, எல்லாமுமாய் , தலை வலித்தது.

எப்பொழுது அரசியல்வாதிகள் முடித்தார்கள் என்றுகூடத் தெரியவில்லை. இவர்கள் நிகழ்வுக்கு முனைவர் திருவேங்கடம் அழைத்தபோதுதான் உணர்வே வந்தது.
எல்லோருடனும் மேடையேறியபோது, முனைவர் கணேசன் , ஒரு தண்ணீர் பாட்டில் மூடியைத்திறந்து, முதலில் இதைக் குடியுங்கள், என்றார்.
2 மிடறு குடித்தபிறகு ஆஸ்வாசம் வந்தது, .என்ன, கமலாக்‌ஷி? என்று, திருவேங்கடம் சார் பார்க்க, சிரிப்பு வந்தது. தமிழர்கள் நல்லவர்கள். மிக மிக அன்பானவர்கள். கமலாக்‌ஷிக்கு பேச வேண்டிய தலைப்பு ஞாபகத்துக்கு வந்தது.


......தொடரும்

3 comments:

  1. வணக்கம்,
    என் பெயர் ஈஸ்வரன். நான் தற்போது JNU-ல் Mphil(தமிழ்) படித்து வருகிறேன். உங்களின் வலைப்பூவில்(blog) "கலிங்கத்துப்பரணி விம்மியதே, தேம்பாவணி அழுததே" எனும் கட்டுரையைப் படித்தேன். அதில் "தேவதாசி முறைக்கு சாவுமணியடித்த மூவலூர் ராமாமிர்தம்,போராடிக்கல்வி கற்ற ருக்மா, ராமாபாய்,முத்துப்பழனி,தில்லையாடி வள்ளியம்மை, குடியாலோ பிக்காஜி எனப்பட்டியலிட்டால் எழுத எழுத தீருமா" என்ற வரி இருந்தது. இந்த வரியில் இடம் பெறும் முத்துப்பழனியைப் பற்றிதான் நான் Mphil செய்து வருகிறேன்.முத்துப்பழனியைப் பற்றி கூறும் நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள் தங்களிடம் இருந்தாலோ,அல்லது அதைப்பற்றி ஏதேனும் தகவல் அறிந்தாலோ எனக்கு தெரிவிக்கவும். அது என் ஆய்விற்கு உதவியாக இருக்கும் என்பதைபை பணிவுடன் தெரிவிக்கிறேன்.

    இப்படிக்கு
    A.ESWARAN
    MPhil(Tamil)
    SL/CIL
    JNU
    NEW DELHI- 67
    CELL +919013942343

    ReplyDelete
  2. வணக்கம்,
    என் பெயர் ஈஸ்வரன். நான் தற்போது JNU-ல் Mphil(தமிழ்) படித்து வருகிறேன். உங்களின் வலைப்பூவில்(blog) "கலிங்கத்துப்பரணி விம்மியதே, தேம்பாவணி அழுததே" எனும் கட்டுரையைப் படித்தேன். அதில் "தேவதாசி முறைக்கு சாவுமணியடித்த மூவலூர் ராமாமிர்தம்,போராடிக்கல்வி கற்ற ருக்மா, ராமாபாய்,முத்துப்பழனி,தில்லையாடி வள்ளியம்மை, குடியாலோ பிக்காஜி எனப்பட்டியலிட்டால் எழுத எழுத தீருமா" என்ற வரி இருந்தது. இந்த வரியில் இடம் பெறும் முத்துப்பழனியைப் பற்றிதான் நான் Mphil செய்து வருகிறேன்.முத்துப்பழனியைப் பற்றி கூறும் நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள் தங்களிடம் இருந்தாலோ,அல்லது அதைப்பற்றி ஏதேனும் தகவல் அறிந்தாலோ எனக்கு தெரிவிக்கவும். அது என் ஆய்விற்கு உதவியாக இருக்கும் என்பதைபை பணிவுடன் தெரிவிக்கிறேன்.

    இப்படிக்கு
    A.ESWARAN
    MPhil(Tamil)
    SL/CIL
    JNU
    NEW DELHI- 67
    CELL +919013942343

    ReplyDelete
  3. madam i want more news about mutthuppazhni. can you sent me;aeswar94gmail.com

    ReplyDelete