Sunday, May 24, 2009

கூத்துப்பட்டறையில் 10 - அந்த நெலாவைத்தான் ஞான் கையிலே புடிச்சேன்

அந்த நெலாவைத்தான் ஞான் கையிலே புடிச்சேன்
என்டெ ராசாவுக்காக



மறுநாள் காலையிலேயே, முனைவர் பட்டத்துக்கு படிக்கும் மாணவர் ரவிவர்மாவோடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்றாள். சில முக்கியமான குறிப்புக்களுக்கு வேண்டி,இன்றியமையாத நூல்களுக்காக அங்கு சென்றிருந்தாள்.அன்றைய தலைவர், திரு இளங்கோ அவர்கள், முகப்பிலேயே அன்போடு வரவேற்றார். ரவிவர்மாவின் பேராசிரியர்,ரவிவர்மாவின் தீஸிஸ் பற்றி பேசிக்கொண்டே, அவளை லைப்ரரிக்கு அழைத்துச்செல்ல, அருமை, அருமையான , புத்தகக் குவியல்களுக்கிடையே, மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனாள். எதிர்பார்த்ததைவிட தங்கம் தங்கமாய் புத்தகங்கள் கண் சிமிட்டி அழைக்க, எதை எடுக்க, எதை விட, ?/?----- வேண்டிய குறிப்புக்களை திகட்டத் திகட்ட எழுதி எடுத்துக்கொண்டிருக்க, 2 பேராசிரியைகள், அவர்கள் எழுதிய நூல்களைத் தர ,
அன்போடு பெற்றுக்கொண்டு, அவசரம் அவசரமாகத் திரும்பினாள்.
அன்று மதியத்துக்குமேல், சென்னையில் சிறப்புமிகு மானாட்டு நிகழ்வில் கலந்து கொள்ள போக வேண்டியிருந்தது.

சிங்கப்பூரிலிருந்தே ஏற்பாடான நிகழ்ச்சி அது, . உடனடியாகக் குளித்து ,உடை மாற்றி, ஆசிரியரிடம் விடை பெற்றாள். பத்திரமாக ஆசிரியர் ஏற்பாட்டில், மானாட்டு அரங்கில் நுழைந்த வினாடி, ஒரு நிமிஷம் உலகமே இன்பமயமாகிப்போனது. என்டெ பொன்னே.? என்னென்பேன்? எப்படிச்சொல்வேன்? என்ன அருமையான காட்சி தெரியுமா?
ஆண்களில் எல்லோருமே வெள்ளை வேஷ்டியும் ,வெள்ளை ஜிப்பா, ஷர்ட்டுமாய், என்ன கண்கொள்ளாக்காட்சி தெரியுமா? பெண்களானால், குங்குமப்பொட்டும், மூக்குக் குத்தியும், கலர்கலர் புடவையுமாய் அழகோ அழகு.பார்க்கப் பார்க்கத் தெவிட்டவே இல்லை.
சிங்கப்பூரில் காணவே முடியாத நிகழ்ச்சி. எல்லாப்பெண்களும் கொண்டை, அல்லது தெற்றிப்பின்னலிட்டு, வந்திருக்க, இவள் மட்டும் கஷவு முண்டும் நேரியலில் நிற்க, சில நிமிஷங்கள் தான். பார்ப்பவர்கள் எல்லோருமே வணக்கம் அம்மா என்றிட நமஸ்காரம், என்று சொல்லிச் சொல்லி மனசு பஞ்சுப்பட்டாய்ப் பறந்தது.

அரைமணி நேரத்திலேயே பல சினேகிதிகள் கிட்டிவிட்டார்கள். அவர்களின் பெயர்களோ கேட்டாலே நாவினிக்கும். நெஞ்சினிக்கும். வாய் மணக்கும். கீதாஞ்சலி, மங்கையர்க்கரசி,கற்பகவல்லி,வளர்மதி, இவர்களோடு பொன்னி என்ற இளம்பெண்ணும் சேர்ந்து கொள்ள, பரஸ்பரம் அறிமுகத்திலேயே, இவளுக்கு அவர்களை எல்லோரையுமே பிடித்துப்போயிற்று.அவர்களுக்கும் இவளை. மறுநாள் காலை அமர்வில்தான் இவளுக்கு நிகழ்ச்சி. பேராசிரியர்கள்,இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், என பலரும் பேசினார்கள்.
மனசு குளிரக்குளிர அபிஷேகம் செய்த புண்ணியம் மட்டும் சத்யமாயிட்டும்,தமிழ்ப்பேராசிரியர்களுக்கு மட்டுமே. என்னமாய் பேசினார்கள் தெரியுமா?
அதிலும் Dr.ராஜமாணிக்கம் எனும் பேராசிரியர்,அச்சு அச்சாய் அம்சமாய்,எவ்வளவு ஆழமாய் பேசினார் தெரியுமா?

மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த இலக்கியவாதிகள் பேச்சு -----ஹூம்,அப்படி ஒரு ஏமாற்றத்தை இவள் எதிர்பார்க்கவேயில்லை. தமிழிலக்கியத்தின் சமகால இலக்கியம் பேசவில்லை. கல்கியின் கேதாரியின் தாயார், மாதவைய்யரின் குட்டிக்கதைகள் பற்றிக்கூட தப்பு தப்பாய் பேசினார்கள், மானுட யதார்த்தத்தை சுதிலயத்தோடு எழுதுபவரோ, அங்கதச்சுவையோடு எழுதுபவரோ,சமூக சிந்தனையோ அவர்களின் கணிப்பில் வரவே இல்லை. இலக்கற்ற இலக்கில் அவர்களும் பேச்சாளர்கள் என்று நுனிப்புல் மேய்ந்துவிட்டுப்போனார்கள், துக்கம் தாங்கவில்லை, ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதுவதென்பது எவ்வளவு பெரிய உழைப்பு,எத்தனை நாட்கள் பாடுபட வேண்டும்? எத்தனை இரவுகள், கண்விழித்துக் குறிப்புக்கள் சேகரிக்கவேண்டும்? இது எதுவுமே இல்லை.சும்மா அனாயாசமாக ,மைக்கைப் பிடித்துப்பேச , அதில் நகைச்சுவையை வேறு அள்ளி விட்டு, கூட்டத்தினரை சிரிக்க வைத்த கோமாளித்தனம் வேறு, [இதில் விசேஷம் என்ன தெரியுமா, இவர்கள் இலக்கியம் படைத்தவர்களே அல்லவாம், ஆனால் இலக்கியப்பேச்சாளர்களாம்.]
அதையே பெரிய சாதனையாக பேசி, மேடையை விட்டு கீழே இறங்கியதும் , எப்படி எமது பேச்சு? என்று சுயமாய் அட்சதை போட்டுக்கொண்டு, --- , , பார்க்கப் பார்க்க ,கோபம் கோபமாய் வந்தது. ஆனால்,மறு நிகழ்வில் கற்பகமும், கீதாஞ்சலியும் அவ்வளவு அருமையாகப்பேசினார்கள், வளர்மதியும் , பொன்னியும் மங்கையர்க்கரசியும் கூட பொறுப்பாய் பேசினார்கள்.

பொன்னியின் பெயர் பொன்னுத்தாயி, சுருக்கி பொன்னி என்று கூறினாள்,என்பது அமர்விலிருந்தபோதுதான் தெரிந்தது. கிள்ளிவளவன் என்பவரும் ஆழமாக பேசினார், ரசித்துக்கேட்க முடிந்தது. அடுத்து அரசியல்வாதிகளின் பேச்சு.என்டெ ஈஷ்வரா? ஈஷ்வரா? அது போல் ஒரு கொடுமை இவ்வுலகில் இல்லை என்று ஓடிவிடலாமா என்றிருந்தது. பத்திரிக்கைகளிலும் , ஊடகங்களிலும்,மட்டுமே, அறிந்திருந்த திருமுகங்களை, நேரில் பார்த்த சோகம் இம்மட்டு அம்மட்டல்ல.என் சொல்வேன்? எப்படிச்சொல்வேன்?
தோளில் துண்டு பறக்க , அன்றைய எதிர்க்கட்சியை அவர்கள் விளாசிய விளாசலை, எழுதவா? கனல் பறக்க அவர்கள் விளம்பிய அரசியல் சிலேடையை மொழியவா? ஆச்சர்யம் என்ன தெரியுமா? அரசியல்வாதிகள் கேரளத்திலும் சரி.தமிழ்நாட்டிலும் சரி. இவர்கள் சத்யமாயிட்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
ஆனால் அவர்களுக்கு கி ட்டிய ராஜோபசாரமோ, ஹூம், பட்டுக்கம்பளம் விரிக்காத குறைதான். ஒரு வரிஒரே ஒரு வரி, அல்லது ஒரு வாக்கியம் கூட நிகழ்வுக்கு பொருத்தமாகப் பேசவில்லை, தெரியுமா? ஆனால் அவர்கள் போகும்போது அவர்கள் பின்னாலேயே ஏற்பாட்டாளர்கள் ஓடினார்கள்.அவர்கள் பேசிய கவைக்குதவா பேச்சுக்கும் தலையாட்டினார்கள். சிரித்தார்கள்.கை தட்டினார்கள். ஆனால் அருமையாகப்பேசிய பலரை அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை. அதற்குள் இரவு உணவுவேளை வந்துவிட்டது. சாப்பிடவே முடியவில்லை.இவள் பரிதவித்தாள், மாலைக்குளியல், பூஜை எதுவுமே இன்னும் ஆகவில்லை.

அரக்கப்பரக்க அறைக்குள் வந்து, குளித்து, கையோடு கொண்டு வந்திருந்த ஈஷ்வரியை, கண்ணிலொற்றி, நாமம் ஜெபித்து முடிக்க, தோழிகள் கதவைத் தட்டினார்கள்.அறைத்தோழிக்கு சிரமம் கொடுக்க வேண்டாமே, என்றிவர்கள் அனைவரும் கீழே வந்து லோபியில் அமர, காற்று சில்லென்று வீச, ரம்ம்மியமான அந்த சூழ்னிலை இன்றும் அப்படியே கண்ணில் நிற்கிறது. பேச்சு பாட்டுக்கு குடும்பம், இவளது இலக்கியம் பற்றி வர, திடீரென்று பொன்னி கேட்டாள், கமலாக்கா, நீங்கள்தான் பெரிய டைரக்டராச்சே? ஒரு மலையாளப்பாடல் பாடுங்களேன் என்றிட? -- மற்ற தோழிகளும் கூட வற்புறுத்த , என்ன செய்ய? --வேறுவழி?.. பாடினாள் ,ஆனால் மலையாளப்பாடலல்ல.
அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு தமிழ்ப்பாடல். என்ன பாடல் தெரியுமா??
----

ஞான்--- அந்த நெலாவைத்தான் ஞான் கையிலே புடிச்சேன், எண்டெ ராசாவுக்காக?
உடனே கீச்சுக்குரலில்,
பொன்னி---- எங்கே எங்கே கொஞ்சம் ஞான் பாக்கறேன், கண்ணை மூடு கொஞ்சம் ஞான் காட்டறேன் என்று பொன்னி எதிர்பாட்டுப்பாட, இவள் அதிர்ந்துபோய் நிற்க, தோழிகள் பட்டாசாய் சிரிக்க, வெட்கமும் , கோபமுமாய் இவள், ----------------


...........தொடரும்

kamalam.online@yahoo.com

No comments:

Post a Comment