Sunday, January 11, 2009

சிறுகதை------"தாகம்'

[பெண்ணியம் காலனித்துவம் போன்ற வாதங்கள்,சபையில் இதுவரைத் தவிர்க்கப் பட்ட, தடை செய்யப்பட்ட உரைகளை , முதற்படுத்த முனைகின்றன..
உதாரணமாக,பெண்ணியல் வாதிகள் எழுப்பும் ஒரு கேள்வி, அகோரமான, போர்க்களங்களை, விவரிக்கும் இலக்கியம் ஏன்,
பெண்களின் சில சராசரி உடல் நிலைகளை விவரிப்பதை மட்டும் அனாகரிகமாகக் கருதுகிறது'??.என்பது?
இதைப்போன்ற ஒரு வித்தியாசமான நிலையைச் சபையின் முன்னிலையில் வைக்கிறது இச்சிறுகதை,.]-சிங்கா ஆசிரியர் குழு.]



எழுத்து------ கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்.
சிறுகதை------"தாகம்'




கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று சுழன்றது.
அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை.
தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது.

அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால் துளைப்பது போன்ற வேதனை.தொடைகளிரண்டும் இரும்புக்கம்பியால் சூடிழுத்தாற்போன்று எரி உபாதையில்
கனன்று கொண்டிருந்தது. முட்டிக்கால்களிலும் முணுமுணுவென்று இனம் புரியாத ஒருவித வலியென்றால், மார்பகங்களிலும் கூட நெறிகட்டிக்கொண்டாற்
போல் வலியில் விம்மியது. தலைவலியும் கட்டியங்கம் கூறுகிறாற்போல் விண் விண்ணென்று தெறிக்கத்தொடங்கியது..

கண்களை அசக்கினாலும் தீப்பறந்தது. உடம்பு முழுவதும் மழுவாய்க் கொதிப்பதை தாரிணியால் உணரமுடிந்தது. ஆனாலும் தொண்டை ஒரு முழுங்கு
தண்ணீருக்காகத் தவித்தது. அந்த வரட்சிதான் தன்னை மறந்து எழவைத்தது. ஆனால் இரண்டெட்டுக்கூட நடக்கமுடியவில்லை. கண்ணை இருட்டிக்கொண்டு
வரவே தலை குப்புற மீண்டும் கட்டிலிலேயே விழுந்து விட்டாள். சில நிமிடங்களுக்கு ஆகாயத்தில் நீலப்பூக்கள் பறந்தன. வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்துப்பறந்தன.
சவமாய், ஜடமாய், எவ்வளவு நேரம் தான் கிடந்தாளோ?
திடீரென்று அடிவயிறு குழைந்த உணர்வில் நரம்புகள் சிலிர்த்தன.இப்பொழுது நினைவு திரும்பிவிட்டது. கூடவே உடலில் ஒவ்வொரு கூ்றுகளும் வலிக்கத்தொடங்கிவிட்டது.வயிற்றுவலி இப்ப்பொழுது தாளவே முடியாமற் போய்விட்டது. தாரிணிக்குத் தன் உடலே தனக்கு அந்நியமானாற்போல்
விரக்தியின் எல்லயில் வெறுத்துப்போய்க் கிடந்தாள்.

சரீரம் முழுவதும் காந்திய அனலின் வெப்பத்தினால், மீண்டும் நா வரண்டது..தாகம் அ நியாயத்துக்கு அவளை வாட்டியது. அழவே கூடாது என்ற வைராக்கியத்தையும் மீறி, இமையோரம், வெந்நீராய் வழிந்து தலையணையை நனைத்தது.மாதந்தோறும் வரும் மரணாவஸ்தைதான், என்றாலும் இப்பொழுதுதெல்லாம் தாரிணியால் தாங்கவே முடியவில்லை.பூப்பெய்திய பெதும்பை பிராயம் முதல், இன்றைய நடுத்தர , அகவையிலும்,
மாதவிடாய்த்தொல்லை ஒருத்தியை இப்படியும் வாட்டுமா? எல்லாப்பெண்களுக்கும் மூன்று நாட்கள், மிஞ்சிப்போனல் ஆறு நாட்கள்தான், என்றால் இவளுக்கு மட்டும் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு இயற்கை அவளை பிழிந்தெடுக்கும். உடலின் சக்தி முழுவதையும் பறி கொடுத்து,உதடு உலர்ந்து,வெளிறிப்போய்,
ரத்தசோகையாலேயே, லோ ப்ரஷர், , முதலில் இவளுக்கு வணக்கம் கூறியது.

அடுத்து மாதாமாதம் சக்தியின் விரயத்தால், இதயம் பலவீனமாகி, 'இதய நோய்' ஆசையோடு தாரிணியை அண்டிக்கொண்டது..இதற்குப்பிறகு, நாடித்துடிப்பின் வேகம் கூட அடிக்கடி கண்ணாமூச்சி ஆட விழைந்தது.ஆகவே சதா மயக்கம்,தலைசுற்றல்,என எப்பொழுதுமே மசக்கைக்காரிகளைப்போல், பலவீனத்தின் அடிமையாகிப்போன
துர்பாக்கியம்தான் அவளால் ஒத்துக்கொள்ளவே முடியாத வேதனை, .
உபாதை பட்டுப்பட்டே, வயிற்றுவலியே அவளுக்கு திகட்டிவிட்டது, என்று கூடக் கூறலாம்.

அதனாலேயே தாரிணி இப்பொழுதெல்லாம் மருத்துவர்களையே மதிப்பதில்லை..அது என்ன?எப்பொழுது சென்றாலும் "'எனிமிக்' "காக இருக்கிறாய்,
என்று சொல்லிச் சொல்லியே, நி்றைய அயர்ன் , கால்சியம் மாத்திரைளை வழங்குவது, அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
"ட்ரிப்ஸ்' ஏற்றுவது? எவ்வளவுதான் ஒருத்தியால் பொறுத்துக்கொள்ள முடியும்?

போகும் உயிர் எப்பொழுதாயிருந்தாலும் போகத்தான் போகிறது.. அதற்கென்ன சிங்காரம் வேண்டிக்கிடக்கிறது..திடீரென்று குழந்தைகள் நினைவு வந்தது.
பள்ளி சென்ற கண்மணிகள் வீடு திரும்பும்போதே அம்மா என்று அழைத்துக்கொண்டு தானே வீடு திரும்புவார்கள்.அவர்களை வளர்த்து ஆளாக்கவேண்டாமா?
குபுக்' கென்று அவளையும் அறியாமல் அழுகை வந்து விட்டது.. எப்பொழுதுமெ இல்லாமலொரு ஆவேசம் உடலுக்குள் புகுந்தாற்போல் அமானுஷ்ய
வேகத்தோடு, சக்தி, அனைத்தையும் திரட்டிக்கொண்டு கட்டிலின் தலை மாட்டைப்பற்றிக்கொண்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள் தாரிணி.

ஒரு கணம் கண்களை மறைத்த இருட்டின் படலம் விலக சில வினாடிகள் பிடித்தது.உனக்காயிற்று ,எனக்காயிற்று .,என்ற ஆக்ரோஷத்தில்
அடிவயிற்றைப் பிடித்துக்கொ்ண்டு மெல்ல எழுந்து நின்றபோது,ஓரளவு சமாளிக்கமுடியும் என்ற தைரியம் பிறந்தது.சுவரைப் பிடித்துப் பிடித்து நடந்தவளால் , ஆயாஸமா? ஊஹூம் , இல்லை, அதீத களைப்பில், இதயம் 'படபட' வென்று அடித்துக் கொண்டது.. நாலெட்டு நடப்பதற்குள், நெஞ்சுக்கூடு படீரென்று அறை வாங்கினாற்போல் வலிக்கத்தொடங்கியது..தாரிணி பொருட்படுத்தவில்லை. எப்படியோ அடுக்களையை அடைந்தவள் தண்ணீர் கூஜாவை நெருங்கியதாகத்தான் எண்ணினாள்.

அதற்குமேலும் இந்தப் பாரத்தைத் தாங்க இயலாது என்பதுபோல், கால்கள் நடு நடுங்க பாதாதிகேசமும் இற்று விழுந்தது. அப்படியே மேஜையைப்
பற்றிக்கொண்டதால், கீழே விழவில்லை. கொதிக்கும் எண்ணைய்க் கொப்பறை்யாய், அடி வயிற்றில் ஒவ்வொரு தசை நாளங்களும்,இப்பொழுது
கொன்று தின்னத் தொடங்கிவிட்டது.உதட்டைக் கடித்து, சமாளிக்க முயற்சித்ததில், பற்களின் அழுத்தத்தில்மெல்லிய உதட்டில் ரத்தம் கசிந்தது தான் பலன்.
நெஞ்சைப் பிளந்து எழுந்த விம்மலால் கண்கள் நிரம்பி வழிந்தபோது, கண்ணக் கொட்டிக் கொட்டியே கண்ணீரை விழுங்கினாள்.

திடீரென்று ' காயத்ரி' மந்திரம் பழக்க தோஷத்தால் நாவில் ஸ்மரிக்க, பறறிக்கொண்டு வந்ததே கோபம் . கோபாமா ,இல்லையில்லை,
வந்ததே சண்டாளம் இவளுக்கு,--கடவுளாம் , கடவுள்,பெண்மையை ஏன் படைத்தாய்,?
பேதை, பெதும்பை,மங்கை,மடந்தை, அரிவை, தெரிவை ,பேரிளம்பெண்,என ஏழு கூறுகளாய்ப் பிரித்ததில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஆனல் ஆண்பாலுக்குக் கொடுக்காத, படைக்காத,துன்பத்தை,பெண்மைக்குமட்டும் வழங்கியதில் ஏனிந்த பாரபட்சம். ஓர வஞ்சனை செய்பவர் எப்படி
பரம் பொருளாக இருக்க முடியும்? இவருக்குப் பூஜையாம், ஆராதனையாம்.?

இதோ ஒரு வாய்த் தண்ணீருக்கு இப்படித் தவிக்கிறேனே? உடல் உபாதையில் இப்படித் துடிக்கிறேனே? எங்கே போனாராம் இந்தக் கடவுள்?
ஹா, அம்மாடி, அய்யோ,சிந்திக்கக் கூட இயலாமல்,அசதியும், ஆயாசமும்,அப்படி ஆட்டிப் படைக்கிறது. அப்படியே மடிந்து உட்கார முயற்சித்தவள்,
அடுத்த கணம் ,அப்படியே, தரையில் சரிந்து விட்டாள். சில்லென்று, தரையின் ஸ்பரிசம்தான் எவ்வளவு சுகம். மயக்கமா? தூக்கமா?
நினைவுகள்,கனவுகள்,எலாமே,தடம் புரண்டு தாலாட்டும் சுகத்தில், வேறு உலகில் சஞ்சரிக்கிறாள்? ஆஅனால்,

இந்த சுகம் கூட நீடிக்கவில்லை. திடீரென்று இரண்டு கால்களும் அசைக்கமுடியாமல், நரம்புகள்,சுருட்டிச் சுருட்டி இழுக்கிறது. பிராணவலிதான்.
இந்தவலிதான், மயக்கத்திலிருந்து, அவளை உலுக்கி எழுப்புகிறது. கையை ஊன்றி எழ முயற்சித்தால், முடியவில்லை. இப்பொழுது சில்லென்ற ஸ்பரிசம்
சுகிக்கவில்லை. உடல் முழுவதும் குளிரால் கிடு கிடுக்கிறது . சரீரம் வெக்கைக்கு பரிதாபமாய் ஏங்குகிறது.,
ஆ, திடீரென்று மேனி முழுவதும் இதென்ன வியர்வைக் குளியல்,,--
மார்பில் ஊசியாய்க் குத்துகிறது. தலையில் கடு கடுவெனக் கொட்டுகிறது.. இடுப்பில் ரம்பம் போட்டு அறுக்கிறது.. கால்கள் இரண்டும் "பிளவை"
நோய்வயப்பட்டாற்போல் பரிதவிக்கிறது.
தாகம், தாகம், என்ன ஆவலாதி இது, ,இதுதான் மரணதாகமா? ஒரு வாய்,------ ஒரே---- ஒரு ----------வாய், ஊஹூம் இல்லை,
இல்லை,ஒரு மிடறு, ,
ஊஹூம் ;ஒரே ஒரு முழுங்குத் தண்ணீர் கிடைத்தாலும் போதுமே,, வரட்சியில், தவிப்பில், எல்லாமே மறந்து போகிறது.

கிணு கிணு, வென்று அது என்ன அலறல். தொலைபேசியா? ஊஹூம் ,இல்லை, இல்லை,, காலன் தான் பாசக்கயிறோடு அழைக்கிறான்.
மீண்டும் நினைவுகள் நீர்க்குமிழிகளாய் வட்டமிடுகிறது.

எங்குமே புகைமண்டலம். வானத்து ஊர்தியிலிருந்து, அது என்ன அமுதசுரபியோடு அருகே வருவது யார்? தேவதூதனா?

பூவிலும் மென்மையாய் அவளைப்பற்றித் தூக்குவது யார்? ஆதுரத்துடன் அவளை அணைத்து, தேவாமிருதம் புகட்டுவது யார்?
ஆ? இது என்ன? தேவாமிருதம் சுடுகிறதே? ஆனாலும் என்ன இதம்? என்ன சுகம்? உறிஞ்சி ஒரே இழுப்பில் குடிக்கும் வேகமிருந்தாலும் , மெல்ல மெல்லவே
குடிக்கமுடிகிறது. உள்ளே சென்ற அமிர்தத்தின் சக்தியில் புத்துணர்ச்சி உடலெங்கும் பரவ,
மெல்லக் கண்களைத் திறந்த தாரிணி ஒரு அற்புதத்தைக் கண்டாள்.

அவள் அருமைக் கணவர் சுதாகரின் அரவணைப்பில் இருந்தாள்..தேவதூதனாக வந்தது கணவரா?
அமுத சுரபியில் தேவாமிர்தம் என அருந்தியது சூடு மைலோவா? எப்படித்தெரிந்தது? பலமுறை தொலைபேசியில் அழைத்தும்
எடுக்காததால் பதறியடித்து ஓடி வந்தேன்.,
'ஆருயிரே, என்னவரே', என மனசு சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கிறது, அத்துணை நேரமும் அடக்கி வைத்திருந்த துக்கம் காட்டாற்று வெள்ளமாய் பீரிட்டெழுகிறது.
தன் இயலாமை, உடல் வலி, அத்தனையையும் கணவரின் நெஞ்சில் இறக்கியவளாய், , உடம்பு குலுங்க, விடைத்து விடைத்து அழுதாள் தாரிணி.
'என்னால் தாங்க முடியவில்லை. இந்த உபாதையை என்னால் தாங்கவே முடியவில்லையே,' என்று விம்மி அழுகிறாள்.
செத்துப்போகிறேன், நான் செத்துப் போகிறேன்., என்று தேம்பித் தேம்பி அழுகிறாள்... ஒரு ஆச்சர்யம்,
இவள் துடித்தழுதும் சுதாகர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே. அழுது ஓயட்டும் என்று காத்திருக்கிறாரா??
ஆ, அம்மாடி,, பளீரென்று அடிவயிற்றில் குண்டூசிக்குத்தல்,, சகலமும் சவுக்கடி பட்டவளாய்க் கண்விழித்தால்,, ஆ, என்ன இது,
அருமைக் கணவரை காணோம்,. மார்போடணைத்து மைலோ ஊட்டிய கணவரைக் காணோம்.?
அப்படியானால், நினைவு தப்பிய நிலையில், மயக்கத்திலேயே, நிகழ்வுப் படலத்தின் நிகழ்வுப் பனுவல் தானா, இத்தனை நேரமும் தான் அனுபவித்தது.?
கிணு கிணு' வென்று, அலறல். அசரீரியாய், நாராசமாய்,, சுனாதமாய், அபஸ்வரமாய் ஒலிக்கிறது.தொலை பேசிதான் என்றறிந்தும்
அவளால் அசையக் கூட முடியவில்லை, இன்னேரத்துக்கு அழைப்பவர் நிச்சயம் அவள் கணவர் தான்,,?
அலங்கோலமாய் தரையில் விழுந்து கிடந்த தாரிணியின் இமையோரம் நனைந்து வழிகிறது.

அசைக்கக்கூட தெம்பில்லாமல், இடுப்புப் பிரதேசத்தின் குருதிப் பிரவாகம்,
இப்பொழுது இதயத் துடிப்பையே மெதுவாக்குகிறது. பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும்ப மதியம் ஆகலாம், மாலையும் ஆகலாம், .
தாரிணி காத்திருக்கிறாள்..மீண்டும் கிணு கிணு வென்று தொலைபேசி ஒலிக்கிறது.
தாரிணி காத்திருக்கிறாள்..கணவர் வருவார்.. அதுவரை நினைவு தப்பக் கூடாது. அழவேண்டும், அவரைப் பற்றிக் கொண்டு அழவேண்டும். .
மயக்கமும் விழிப்புமாய் தாரிணி காத்திருக்கிறாள்..

[ முற்றும்.]



[சிங்கா --,சிங்கப்பூரின் பல்கலைக்கழக இதழில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த கதை]

No comments:

Post a Comment