Friday, January 9, 2009

சிறுகதை----ஞயம் பட உரை - 2

சிறுகதை----ஞயம் பட உரை
எழுத்து----கமலாதேவிஅரவிந்தன்
----------------------------------------------------------------


நீங்கள், நீங்கள் மட்டுமே நவீனன், மேதை,என்றாலும் கூட அதை நீங்கள் சொல்லக்கூடாது.மற்றவர்கள்தான் கூறவேண்டும், என்றாலும் போகட்டும், ஜெயதேவ், ஊரில் உங்கள் தொழிலே படைப்பியல் தான்.ஆனால் இங்கு சிங்கப்பூரில் இலக்கியம்
பகுதினேரத்தொழில்தானேயொழிய, எங்களுக்கெல்லாம் வேறுவேலை இருக்கிறது. அப்படியும் பிழைப்புக்கு வேறு உத்தியோகம் பார்த்துக்கொண்டு இலக்கிய தாகத்துக்கு மட்டுமே, நாங்கள் இந்த யாகத்தில் ஈடுபட்டுள்ளோம். அதனால்தான் , எங்கள் உத்தியோக பெருமிதத்தால்தான், உங்களைப்போன்றோரை இங்கு வரவழைக்கவே முடிந்தது. இருந்தாலும் ஓருண்மையை தெரிந்து கொள்ளுங்கள். அக்கரை மண்ணைவிட அரிய படைப்பாளர்கள் இங்கும் இருக்கிறார்கள்.அன்புக்கப்பால், எனும் வானொலினடகத்தை மட்டுமே கேட்டு, அதை அப்படியே மனதில் பதித்து நாடகம் எழுதக்கற்றுக்கொண்ட நாடகாசிரியரை,
இன்று விருது பெற்ற நாடகாசிரியராக உங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்.தேடி' என்ற படைப்பின்மூலம் சிங்கை இலக்கியத்துக்கே புதிய பார்வையும் நவீன சிந்தனையும் கொடுத்த எழுத்தாளரையே உங்களுக்கு அடையாளம் காட்டமுடியும்.'' என்று க்ரிஷ்ணன்குட்டி பிடரிசிலிர்க்க பதிலடி கொடுத்துக்கொண்டிருந்த கட்டத்தில்,,
அடடா, இங்கேயா இருக்கிறீர்கள்? சாப்பிடவரவில்லையா? என்று சக ஏற்பாட்டாளர் தேடிவர, அப்போதைக்கு இருவரும் பிரிந்தனர். மதிய உணவுக்குப்பின்னர், ஏனோ அந்த எண்ணம் உதித்தது. சிறிது நேர யோசனைக்குப் பின்னர், வீட்டிற்குச் சென்று, தன்னுடைய படைப்புக்களைக் கொண்டு வந்தான்.

மதிய உணவுக்கு அடுத்த நிகழ்ச்சியில், முதல் படைப்பாளராக க்ரிஷ்னன்குட்டியின் ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்பட்டது..கலந்துரையாடலில் சிங்கை நாடகவியலின் பார்வைகள்' பகுதியில் ' நிலைப்புச்சித்திரம் தலைப்பில் தன்னுடைய நான்குமொழி நாடகத்தின் ஒரு காட்சியை Spatioal Behaviour' நகர்வுகளும் தள உறவாடல் இயல்புகளும் எனும் பகுதியை க்ரிஷ்ணன்குட்டி நடித்தும் காட்டினான். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியேறிக்கொண்டிருக்க ஜெயதேவ் புன்னகையோடு க்ரிஷ்ணன்குட்டியை நெருங்கி வந்தான்.
அன்புடன் கைகளை பற்றிக்கொண்டான். நீங்கள் எழுத்தாளர் என்று தெரியும், தமிழ், மலையாளம், ஆங்கிலம், மலாய் என நான்கு மொழியிலும் உங்கள் ஆற்றலைக் கண்டேன்.
ஆனால் இன்னும் பார்வை ஏன் விசாலமடையவில்லை? இவ்வளவு திறமை இருந்தும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைவிட்டு, வெளியே வரவே ஏன் மறுக்கிறீர்கள்? சமூகக்கதாசிரியர்கள் யாருமே நவீனப்படைப்புக்களை அதிகம் தெரிந்து கொள்வதில்லையா? அல்லது
தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா? என்று ஜெயதேவ் கேட்டபோது வாய் விட்டு சிரிக்கத்தோன்றியது க்ரிஷ்ணன் குட்டிக்கு,.,

'சமூகக்கதாசிரியர்கள் என்றாலே சும்மா 'எனும் இவன் மன நோயைத்தீர்ப்பதெப்படி? தன்னைச்சுற்றிய நிகழ்வுகளையே தெரிந்து கொள்ளாதவன் சமுதாயத்தைச் ச்சீர்திருத்துவதா ?யதார்த்த இலக்கியமே தெரியாதவன் சமூகப் பிரக்ஞையை அலசுவதா?
தி, ஜானகிராமானையும், எம்.டி, வாசுதேவன் நாயரையும், சிங்கப்பூரின் மலாய்மொழி நாடகாசிரியர், நதிபுத்ராவையும், பெருமையோடு விளக்கிவிட்டு, ராமானுஜம் சான்றோரின் வெறியாட்டம் நாடகத்தின் நேர்க்கோட்டுக்குள் அடங்கிய முக்கோணக் கட்டமைப்பில்தான் வியந்த பகுதியையும் , காவாலம் பணிக்கரின் மத்தவிலாசபிரகசனம் நாடகத்தில் அரைவட்டக்கட்டமைப்பின் விசித்திரத்தையும், ஜி. சங்கரப்பிள்ளையின் மூதேவித்தொய்யம் நாடகத்தில் கயிறு என்ற கைப்பொருள் மூலம் மட்டுமே சடங்குக் கலையை குறியீட்டு உத்தியில் அறிமுகப்படுத்திய அழகியலில் மனம் பறி கொடுத்ததையும் பேசபேச ஜெயதேவ் ஸ்தம்பித்துப்போனான். கிரிஷ்ணன்குட்டி தொடர்ந்தான்.
ஜெயதேவ், சமூகக்கதை எழுதவும் கனிந்து குழைந்த மனது வேண்டும், வக்கிரம் என்ற சொல்லின் உக்கிரத்தையே வைத்துக்கொண்டு ஒரு நாவலே படைத்தவன் ஞான்,என்றாலும் சுய காழ்ப்புணர்வுக்கு இலக்கியத்தை அடகு வைப்பவன் இலக்கியவாதியல்ல, சொந்த மண்ணின் விழுமியங்களை , அதன் கலாச்சார உன்னதங்களோடு எழுதவும் கூட சமகாலப்ரக்ஞையும் சமுதாயவாழ்வைப்பற்றிய அக்கறையும் ப்ரச்சினைகளை மனிதாபிமானத்தோடு அனுகும் பார்வையும் வேண்டும். அது என்னிடம் பூரணமாக இருப்பதாக ஞான் நம்புகிறேன், யாருக்குமே புரியாததை பார்வையாளர்களிடையே ஊடகமாக நடத்திவிட்டு ஞான் தான் அறிவுஜீவி , இது புரியாதவர்கள் எல்லாம் அடிமுட்டாள்கள் என்று கமெண்ட் அடிக்கும் அறிவுஜீவித்தனம் எனக்கு வேண்டாம். இப்போதும் சொல்கிறேன் ஞான் ஒரு சமூகக் கதாசிரியன் என்பதில் எனக்கு பெருமிதமே தவிர குறையில்லை.'
கிரிஷ்ணன்குட்டி பேசி முடித்தும் ஜெயதேவ் பேசவில்லை. பிறகு சந்திப்போம், என்று மட்டுமே கூறிவிட்டு, விடைபெற்றுக்கொண்டான் ஏனோ திடீரென்று ஜெயதேவைப்பற்றி, மோகினியாட்ட ஆசிரியை பாருக்குட்டியின் ஆதங்கம் இப்போது நினைவுக்கு வந்தது.
ஆரம்ப காலத்தில் பாருக்குட்டியிடம் மாணவனாகப்பயிற்சி பெற்ற ஜெயதேவ், இன்று சினிமாவில் புகழ்பெற்றபிறகு, பாருக்குட்டி, தங்கச்சன் போன்றோரை கலைனிகழ்ச்சிகளில் சந்தித்தால் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் புகையை ஊதிக்
காட்டுவான் என்றும் அவர்களை தெரிந்ததாகவே காட்டிக்கொள்வதில்லை என்பதோடு குரு நமஸ்காரம், பெரியோரை மதித்தல் போன்ற செய்கைகள் எல்லாமே கேலிக்கூத்து, என்று பரிகாசம் செய்பவன் என்பதெல்லாம் ஞாபகம் வர க்ரிஷ்ணன் குட்டிக்கு ஜெயதேவின்
மனவியல் ஓரளவுக்கு புரிந்ததுபோலிருந்தது.

அடுத்த நாள் மானாட்டின் இறுதி நாள். அனைத்து படைப்பாளர்களின் பட்டறைகள், மட்டுமல்ல, மற்ற எல்லா நிகழ்ச்சிகளையுமே கிரிஷ்ணன்குட்டி கவனித்தான். ஜெயதேவ் நடத்திய பட்டறையில் பாதிப்பேருக்கு நெல்முனையளவுக்கு கூட புரியவில்லை.ஆனால் கிரிஷ்னன்குட்டி மூச்சுவிடவும் மறந்துபோய் ரசித்து லயித்தான். எப்பேர்ப்பட்ட அற்புதமான கலைஞன் ஜெயதேவ் , திமிரும், அகந்தையும் மட்டுமே கவசமாயில்லாமல், அடக்கம் மட்டும் இவனுக்கிருந்தால் அழுக்குப்போகக் குளிப்பாட்டிய மாசற்ற மனிதனாய்
இவனை மதிக்க முடியும்.. ஒருமுறை திட்டினான் என்பதற்காக எதிராளியே அதை மறந்தால்கூட மறக்கத்தெரியாமல் பகைமை உணர்வோடு பாம்பாய் சீறுவதும் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதாலேயே தான் ஒரு அறிவுஜீவி என ஆணவத்தோடு நடமாடுவது மான பண்புகள் மட்டும் இவனை விட்டு விலகினால் நிச்சயம் ஜெயதேவ் திறமையாளனே..

ஏனோ மானாடு முடிந்து கட்டுரையாளர்கள் திரும்பிப்போகும் தினத்தன்று, ஜெயதேவ் க்ரிஷ்ணன்குட்டிக்கு கை கூப்பியபோது க்ரிஷ்ணன்குட்டி நட்போடு அக்கரங்களைப் பற்றிக்கொண்டான். பெங்களூர் வந்தால் அவசியம் நீங்கள் எண்டெ இல்லம் வரவேண்டும், க்ரிஷ்ணன்குட்டி,' என்று ஜெயதேவ் விடுத்த அழைப்பில் மென்மை இருந்தது,கனிவு இருந்தது, ஏனோ க்ரிஷ்ணன் குட்டிக்கு ஜெயதேவை பிடித்துப்போயிற்று.


[முற்றும்]

No comments:

Post a Comment