Friday, September 2, 2011

கமலாதேவி அரவிந்தனின் ‘நுவல்’


அண்மையில் பார்த்த ‘பௌலி’ எனும் திரைச்சித்திரம் மனதைக் கவர்ந்தது. இக்கதையில் வரும் பௌலி எனும் கிளியின் பேசும் திறனே கதையைச் சுவாராஸ்யமாய் இட்டுச் செல்கின்றது. சிறுமி மெர்ரி பௌலியைத் தாத்தாவின் அன்பு பரிசாக பெறுகின்றாள். மனித உறவின் நிழலைப் பௌலியின் மீது பதிக்கின்றாள். மெர்ரி தன் நட்பாக பௌலியை ஏற்றுக்கொண்டதைப் போன்றே பௌலியும் அவளை நட்பாகிக்கொள்கின்றது. அவர்களின் பால்ய சிநேகம் அதற்கே உரிய சுயத்தன்மையுடனும் பாசத்துடனும் மிளிர்கின்றது. மெர்ரியின் திக்குவாய் குணமடைய பௌலி பேச கற்றுத் தருகின்றது. மெர்ரி பௌலிக்குப் பறக்க கற்று தருகின்றாள். ஆனாலும் பௌலி பறப்பதற்குச் சிரமப்படுகின்றது.

பௌலியின் பேசும் திறனை ஏற்க மறுக்கும் மெர்ரியின் தந்தை, கற்பனைக்கும் எதார்த்தத்துக்கும் உள்ள வேறுப்பாட்டினை மெர்ரி அறியவில்லை என கருதிப் பௌலியை வீட்டிலிருந்து வெளியேற்றுகின்றார். பலரிடம் கைமாறி அடகுக்கடையில் தஞ்சம் புகும் பௌலியை இவி எனும் பெண்மணி வாங்குகின்றாள். தன் நினைவு முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும் பால்ய சிநேகிதி மெர்ரியை மீண்டும் கண்டடைய பௌலியின் தேடல் தொடங்குகின்றது. பௌலிக்கு உதவ முன்வரும் இவி தேடல் முழுமைபெறுவதற்குள் கண்பார்வை இழந்து இறக்கின்றார். இறக்கும்வரையிலும் இவியின் கண்களாய் பௌலி உடன் இருக்கின்றது. அதுவரையிலும் பறக்க தெரியாமலும் இயலாமலும் இருந்த பௌலி, இவியின் மரணத்திற்குப் பின்னர் பறந்தே மெர்ரியைத் தேடி லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வருகின்றது. இழப்புகளே பல தருணங்களில் வாழ்க்கையின் பரிமாணங்களைப் விரைவாக விரிவுப்படுத்திவிடுவதில் வெற்றியடைகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் இக்னாசிவொக்குச் சொந்தமான பறவைகளுடன் சேர்ந்து நிகழ்ச்சி படைக்கும் பௌலியைக் கடத்திச் செல்கின்றான் பென்னி. மெர்ரியிடம் சேர்ப்பதாகக் கூறி திருட்டில் பௌலியை ஈடுப்படுத்துகின்றான். வீடொன்றில் பிடிப்பட்டு ஆய்வு மையத்துக்கு அனுப்பப்படும்வரையிலும் திருடுவது குற்றம் என்பதைப் பௌலி அறிந்திருக்கவில்லை.

விஞ்ஞானி டாக்டர் ரெய்ன்கோல்ட் ஆய்வுகளுக்குப் பௌலியை உட்படுத்த எத்தனிக்கின்றார். பௌலியின் ஒத்துழைப்பைப் பெற டாக்டர் ரெய்ன்கோல்ட்டும் மெர்ரியிடம் சேர்ப்பித்துவிடுவதாக கூறி அதே கூற்றை முன்வைக்கின்றார். டாக்டர் ரெய்ன்கோல்ட்டின் சுயநலத்தை அறிந்து கொள்ளும் பௌலி ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றது. பல மனிதர்களைக் கடந்து வந்துவிட்ட பௌலிக்கு டாக்டர் ரெய்ன்கோல்ட்டின் சுயநலமும் பொய்யும் சட்டென கண்களுக்குத் தெரிந்துவிடுகின்றன. பௌலியின் சில சிறகுகள் நீக்கப்பட்டு பறக்க இயலாவண்ணம் ஆய்வு மையத்திலேயெ சிறைபடுத்தப்படுகின்றது. பௌலியின் கதையைக் கேட்ட மிசா தன் வேலையைத் துறந்து பௌலியை வெளிகொணர்ந்து மெர்ரியிடம் சேர்க்கின்றான். கதை நெடுகிலும் பௌலியின் வார்த்தைகள் மனித வாழ்க்கையை நம் முன் விரிவுப்படுத்தி ஆழ்ந்த சிந்தனைகளைக் கிளறி விடுகின்றன.

இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு சட்டென ‘நுவல்’ சிறுகதை நினைவுக்கு வந்தது. திருமதி கமலாதேவி அரவிந்தனின் ‘நுவல்’ எனும் கதையிலும் கிளியொன்றின் வருகை காணப்படுகின்றது. வேலை முடிந்து வீடு திரும்பும் கணவர் கிளியைக் கொண்டு வருகின்றார். கணவர் முதல் குழந்தைகள் வரை கிளியின் மீது அன்பு செலுத்துக்கின்றனர். பிராணிகள் மீது அதுவரையிலும் இல்லாத பாசம், சட்டென கணவருக்கு வந்ததில் வியப்படைகின்றாள். அன்பு எனும் உணர்வு நம்மை அறியாமலேயே பல தருணங்களில் நம்மைத் தழுவிக்கொள்கின்றன. மெல்ல அவளுக்கும் கிளியின் மீது அன்பு ஏற்படுகின்றது. கிளியின் முன் பாடிக்காட்டுகின்றாள்; நாட்டியமாடுகின்றாள். ரேணுவுக்குக் கிளி மகளாகின்றாள். ஒருநாள் இவளின் கவனத்தைத் தன் வசம் திருப்ப முயன்று தோல்வியடைகின்றது கிளி. ஆவேசத்துடன் ரேணுவைக் கொத்த அவள் ஏசிவிடுகின்றாள். கிளி பறந்து போய்விடுகின்றது. தவிப்புக்குள்ளாகின்றாள் ரேணு. அவளது நினைவுகளில் நிறைந்திருக்கும் கிளியைப் பற்றி அவள் நித்தமும் நினைக்கின்றாள். மீண்டும் ஒருநாள் அக்கிளி அவளிடம் வந்து சேர்வதாய் முடிவுறுகின்றது கதை.

கதையில் வரும் மனிதர்கள் மற்றும் பிராணியிடையிலான அன்பு சிந்திக்க வைக்கின்றது. பிராணிகளிடம் அன்பைப் பகிர்ந்து கொள்பவர்களைக் காட்டிலும் தங்கள் செல்வாக்கின் அடையாளங்களாய் பிராணிகளை பயன்படுத்திக் கொள்பவர்கள் அதிகம். அன்பென்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, எல்லா அஃறிணைகளுக்கும் உயர்திணைகளுக்கும் பொதுவானது என்பதை இரு கிளிகளும் நினைவுகளில் விதைக்கின்றன.

ரேணு ஏசியதால் பறந்தோடிய கிளி அதற்குள்ளும் இருக்கும் உணர்வுகளைச் சொல்லாமலேயே புரிய வைக்கின்றது. கதையில் வரும் ரேணுவின் கணவர் பிராணிகள் மீது அன்பு காட்ட தெரியாதவர். ஆனால் அவருக்குள்ளும் அன்பு புதைந்திருப்பதைக் கிளி வெளிக்கொணர்கின்றது. அன்பில்லாதவர்கள் எனும் பட்டியலில் உள்ள பலர் அன்பைக் காட்ட தெரியாதவர்கள் தவிர அவர்களிடம் அன்பில்லை என கூற இயலாது. அன்பைக் காட்ட கற்று தர முடியாது. அதைத் தருணங்களே உருவாக்கித் தருகின்றன. தருணங்கள் பிராணிகளையும் தன்வசம் வைத்திருக்கவே செய்கின்றன. பிராணிகளாக இருந்தாலும் தன் குடும்பத்தின் ஒரு பகுதியாகிவிடும் வேளைகளில் இழப்புகள் தவிக்க வைக்கின்றன. இழப்புகளே பல சமயங்களில் அன்பின் ஆழத்தை அறிய வைக்கின்றன.

பௌலி சொன்னதும் ‘நுவல்’ கதையின் கிளி சொல்லாமலேயே உணர வைத்ததும் வாழ்க்கையின் ஆழ்ந்த அர்த்தங்களின் ஒரு பகுதியாகத்தான் இருக்கின்றது.


நன்றி -வல்லினம்

1 comment:

  1. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/09/ladies-special.html?showComment=1409788509683#c5894648943052542591

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete