Monday, March 8, 2010

இந்த ஜென்மத்தில்

இந்த ஜென்மத்தில் ?


அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கணவர், கனத்த ஒரு உறையை நீட்டியபோது ஆச்சரியமாக இருந்தது.
.என்ன இது, இவ்வளவு மொத்தமாக இருக்கிறதே? ஏதாவது பார்சலா?
அப்பொழுது மகள் 2 வயதுக்குழந்தை. குழந்தையை கணவரிடம் நீட்டிவிட்டு, அவசரமாகப்பிரித்தால்,
ஸ்வாசமே ஒரு நிமிஷம் நின்றுபோய், பிறகுதான் நிதர்சனம் உறைத்தது.
என்ன? நின்டெ ஸ்க்ரிப்ட் திரும்பிவந்து விட்டதா? என்று கணவர் சர்வ சாதாரணமாகத்தான் கேட்டார்.
அதுவே அவளுக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது.
என்னமோ உலகமே இடிந்து விழுந்துவிட்டாற்போல் ,அப்படியே கண்கள் வழி மதகு பொத்துக்கொண்டு வழியத்தொடங்கிவிட்டது.
அப்பொழுதுதான் அவள் வானொலியில் நாடகம் எழுதத்தொடங்கியிருந்தாள்.
அவளது 6 அரை மணி நேர நாடகங்கள் ஒலிபரப்பாகியபின்னர்
தயாரிப்பாளர், ஒரு தொடர்நாடகம் எழுதி அனுப்புமாறு கடிதம் அனுப்பியிருந்தார்.
உடனே உற்சாகத்தோடு எழுதி அனுப்பிய நாடகம் தான் திரும்பி வந்திருக்கிறது?
எப்படி திருப்பி அனுப்பலாம்? அனுப்பலாமா? அதுவும் இவளது ஒவ்வொரு நாடகம் ஒலிபரப்பாகும்போதும்
இவளைப்பாராட்டி , 2 வரியாவது எழுதும் தயாரிப்பாளர், இந்த நாடகத்தை மட்டும் எப்படி திருப்பி அனுப்பலாம்?
துக்கம் தாங்கவில்லை.ஸ்க்ரிப்டை நெஞ்சோடணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்.
போதும், இன்றோடு ஞான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.
இந்த ஜென்மத்தில் இனி சிங்கை வானொலிக்கு மட்டும் ஞான் எழுதவே மாட்டேன், என்று கண்ணீர் சபதம் எடுத்தாள்.
குழந்தை அழுகிறாள், வந்து பால் கொடு, என்று கணவர் அழைக்க, இவளால் மன்னிக்கவே முடியவில்லை.
ம்,,என்றால் அழுகை, ஆ, என்றால் அழுகை, உன்னை எனக்குத்தெரியாதா? என்பதுபோல் கண்வரின் அசட்டையை அவளால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இவளது துக்கம் பற்றி ஒருவார்த்தை ஆறுதலாகப்பேசத்தெரியவில்லை.
இவரெல்லாம் ஒரு கணவரா? கோபம் கோபமாய் வந்தது,
அவள்முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு, போய்க் குழந்தைக்கு பால் கொடுத்தாள்.
[அன்றெல்லாம் தாய்ப்பால் கொடுப்பது அவ்வளவு முக்கியம்]
பால் குடித்துமுடித்த குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டு, இவள் சோகத்தோடே நடமாடினாள்.
இரவு உணவை கணவருக்கு கொடுத்துவிட்டு, இவள் சாப்பிடவில்லை.குழந்தையைத் தூங்கப் பண்ணிவிட்டு,
போய்த் தரையில் படுத்துக்கொண்டாள். மீண்டும் ஸ்க்ரிப்டை நெஞ்சோடணைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
இப்படி ஒரு கொடுமை நடந்திருக்கிறதே அருமை மனைவிக்கு, உண்மையிலேயே இவள் மீது துளியாவது காதலிருந்திருந்தால்,
உடனே தயாரிப்பாளருக்கு போன் போட்டு,ரெண்டு கேள்வி கேட்கவேண்டாமா? அதுவும் இவள் யார்? வானொலியிலிருந்து அவர்களாகவே
கடிதமனுப்பி எழுதக்கேட்டவர்களாயிற்றே? அப்படியிருக்க எப்படி இவளது ஸ்கரிப்டை திருப்பி அனுப்பலாம்?
அதைவிட வயிற்றெரிச்சல் ,கணவர்--ஹ்ம்ம்--, மணமாகி வந்தபோது இவள் சுமந்து வந்த வெள்ளி{பரிசு}க்கோப்பைகளை ,
மாமா, மாமிக்குக்கூடதெரியாமல், அருமையாக இவர்களின் அறையிலேயே வைத்துக்கொள்ளச்சொல்லி ரசித்தவர்தானே?
எல்லாமே சும்மா!உலகமே பொய், எல்லாமே பொய், என்டெ பார்ய எழுத்துகாரியானு,
என்று மற்றவர்களிடம் சொல்வதுகூட சும்மாதான், இவ்வளவுக்குப் பிறகும் ஞான் ஏன் உயிர் வாழ வேண்டும்?
யாருக்காக வாழவேண்டும்? விக்கி விக்கி அழுதாள். பளிச்சென்று விளக்கு எரிந்தது.
இப்ப எதற்காக அழுகிறாய்? சாப்பிடாமல் கூட என்ன அடம் இது? என்று அருகே வந்த கணவர் கேட்க,
ஞான் எப்படிப் போனால் நிங்ஙளுக்கென்ன? இந்த ஜென்மத்தில் நிங்ஙள் என்னிடம் பேச வேண்டாம், என்று
சொல்லி முடிக்கவில்லை, அடுத்தகணம் கண்களில் மின்னல் பறந்தது.கன்னம் அதிர்ந்தது. மணமாகி வந்த பிறகு முதன்முதலாக
கணவரிடம் வாங்கிய முதல் அறை.. அப்படியே, உடைந்து போய் அழுதாள்.
அ. உ என்றால் இது ஒரு வசனம், . இந்த ஜென்மத்தில் பேசவேண்டாமாம். பேசுவேன் இந்த ஜென்மம் முழுக்க ஞான் பேசுவேன்.
நீயும் என்னிடம் பேசித்தான் ஆகவேண்டும் , என்றவர் கோபத்தோடு , இவள் கையிலிருந்த ஸ்க்ரிப்டை பிடுங்கினார்.
பிரித்துப் படித்தார். தயாரிப்பாளரின் கடிதத்தை ஆங்கிலத்தில் சத்தமாகப் படித்தார்.
கதா மாந்தர்களை அருமையாக கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால் கடைசி அத்தியாயத்தில்,பக்கங்கள் போதவில்லை.
தொலைக்காட்சிக்கு என்றால் பரவாயில்லை. ஆனால் வானொலிக்கு இது போதாதே, , இறுதி 2 காட்சிகள் மட்டும்
இன்னும் 3 பக்கங்கள் பூர்த்தியாக்கி, உடனே அனுப்பி வைக்கவும்,.என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது..,
அவர் படிக்கப் படிக்க மனசெல்லாம் பரவசமாகிப் போனது. அட, கடைசியில் விஷயம் இதுதானா?
அவசரத்தில் ஸ்க்ரிப்டைத்தான் பார்த்தாளே தவிர தயாரிப்பாளரின் கடிதத்தை இவள் படிக்கவேயில்லை.
கோபம், அழுகை, எல்லாமே போன இடம் தெரியவில்லை..
எதில்தான் பொறுமை. எல்லாமே படபடப்புதான்,இப்படி ஒரு ஸ்டுப்பிட்டை என்டெ தலையில் கட்டினார்களே,
என்று கணவர் போலியாக அலுத்துக்கொள்ள, இவள் வெட்கம் மறந்து கணவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
தகஷணமே கணவரும் இவளை மன்னித்துவிட்டார்.
எல்லாம் சரி,
இதற்குப்பிறகாவது, இந்த ஜென்மத்தில் இந்த ஸ்டுப்பிட் திருந்தினாளா?
i am sorry, அதையெல்லாம் நிங்ஙள் படபடப்பு பத்மாவதியிடம் தான் கேட்கவேண்டும்.
அன்புடன் கமலம்

பி.கு--மகளிர் தினமும் அதுவுமாய் ஏனோ மலரும் நினைவுகளை தவிர்க்கமுடியவில்லை,

No comments:

Post a Comment